இந்தியாவில் பேட்டரி கார் விற்பனை படுமோசம்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் பேட்டரி கார் மார்க்கெட் நிலவரம் குறித்து டெலாய்ட்டி டச்சே தொமட்சு என்ற நிறுவனம் விரிவான ஆய்வை மேற்கொண்டது. பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த அறிக்கை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், பேட்டரி கார்கள் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்களுக்கு அதிகம் இருப்பதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85க்கு விற்றாலும், பேட்டரி கார் வாங்குவது குறித்து இந்தியர்கள் பேச்சுக்குகூட பரிசீலனை செய்யமாட்டார்கள் என தெரிவிக்கப்ப்டடுள்ளது.
மேலும், இரண்டு மணி நேர சார்ஜில் 320கிமீ செல்லும் திறன், அதிக வேகம் உள்ளிட்ட அம்சங்களை இந்தியர்கள் எதிர்பார்ப்பதும் தெரியவந்துள்ளது.
வீட்டிற்கே தேவையான மின்சாரம் கிடைக்காத நிலையில், பேட்டரி காருக்கு எங்கே 8 மணிநேரம் சார்ஜ் போடுவது, அவசரத்தில் காலை வாரி விட்டுவிடும் என்ற அச்சமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சம் பேட்டரி கார்கள் இருப்பதாக அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் மஹிந்திராவின் ரேவா-ஐ என்ற ஒரே ஒரு பேட்டரி கார் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் மேற்கண்ட பல காரணங்களால் மார்க்கெட்டில் எழுந்து நிற்கமுடியாமல் அவஸ்தையில் உள்ளது.
இந்த நிலையில், விரைவில் என்எக்ஸ்ஆர் என்ற புதிய பேட்டரி காரை அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆய்வின் மூலம் இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை புதிய ரேவா என்எக்ஸஆர் பூர்த்தி செய்யுமா?பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications








