கிரேட் வால் ஒத்துழைப்புடன் சீனாவில் காலூன்ற டாடா ஜாகுவார் முயற்சி

கடந்த 2008ம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வாங்கியது. பொருளாதார ரீதியில் கடும் வீழ்ச்சியில் இருந்த ஜாகுவார் லேண்ட் ரோவரை மீண்டும் எழுச்சி பெற செய்யும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.நடப்பு நிதி ஆண்டில் இதுவரை முடிந்துள்ள காலாண்டுகளில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கணிசமான லாபத்தை பதிவு செய்துள்ளது.இதனால்,ஜாகுவார் லேண்ட் ரோவர் வளர்ச்சிக்கு ரூ.6,000கோடி வரை முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
மேலும்,ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை சீன சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சிகளிலும் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. எஸ்யூவீ கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சீனாவை சேர்ந்த கிரேட் வால் நிறுவனத்துடன் இணைந்து ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேச்சு நடத்துவதற்காக,ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சமீபத்தில் சீனா சென்றுள்ளனர். அப்போது,கூட்டு ஒப்பந்தத்தில் கார் விற்பனையை துவங்குவது குறித்து கிரேட் வால் நிறுவனத்தின் தலைவருடன் அவர்கள் பேச்சு நடத்தி உள்ளனர்.
முதல் சுற்று பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால், விரைவில் இறுதி உடன்பாடு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் பெரிய கார் விற்பனை சந்தையாக மாறியுள்ள சீனாவில், ஜாகுவார் லேண்ட ரோவரும் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு காலூன்ற முயற்சி செய்து வருவதாக ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








