ரூ.80 கோடி முதலீட்டில் தமிழகத்தில் உதிரிபாக தொழிற்சாலைகள்: ஜாம்னா

வாகனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் ஜாம்னா ஆட்டோ நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலை அமைத்துள்ளது. இந்நிலையில், வாகன உற்பத்தியின் கேந்திரமாக மாறியுள்ள தமிழகத்தில் புதிதாக இரண்டு தொழிற்சாலைகளை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜாம்னா ஆட்டோவின் தலைமை செயல் அதிகாரி ரந்தீப் ஜவுஹர் கூறியதாவது:
"சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு முன்னணி வாகன தயாரிப்பாளர்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. எனவே, வாகன உதிரிபாகங்களுக்கான தேவையை கருத்தில்கொண்டு, சென்னை மற்றும் ஓசூரில் புதிய உதிரிபாக தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
சென்னையில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் லிப்ட் ஆக்சில்கள் தயாரிக்கப்படும். ஓசூரில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் பாரபாலிக் ஸ்பிரிங்குகள் தயாரிக்கப்படும். சென்னை தொழிற்சாலை வரும் ஜூலை மாதமும், ஓசூர் தொழிற்சாலை வரும் டிசம்பர் மாதமும் உற்பத்தியை துவங்கும்.
இந்த இரண்டு புதிய தொழிற்சாலைகளும் ரூ.80 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.டைம்லர் இந்தியா, ரினால்ட் நிசான், லேலண்டு நிசான், அசோக் லேலண்டு மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








