ஆட்டோமொபைல் துறையில் முதலீடு: அமெரிக்க நிறுவனங்களுக்கு ஜெயலலிதா அழைப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் நேற்று சந்தித்து பேசினார்.
இலங்கை தமிழர் பிரச்னை மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட் சமூக, பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் முக்கிய பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பு ஒருமணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.
அப்போது, ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் டெட்ராய்டாக மாறிவரும் தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய முன் வரவேண்டும் என்றும், இதற்கு அமெரிக்க அரசு ஒத்துழைப்பு நல்க நடவடிக்கை எடுக்குமாறு ஹிலாரியிடம் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
மேலும், அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னையில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருவதையும் குறிப்பிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட ஹிலாரி, ஸ்டேட் டூ ஸ்டேட் ஒப்பந்த அடிப்படையில், தமிழகத்திற்கும், அமெரிக்காவி்லுள்ள நிறுவனங்களுக்கும் இடையில் எளிய தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி கூறினார்.
ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்ட நாள்முதல் ஆட்டோமொபைல் துறையில் அதிக முதலீடுகளை பெறுவதற்கு முதல்வர் ஜெயலலிதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து பிரான்சை சேர்ந்த மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான பியோஜியட் சிட்ரோவன் நிறுவனத்துடன் பேச்சு நடத்தினார்.
மேலும், கார் தொழிற்சாலை அமைப்பதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








