ரூ.4 லட்சத்தில் புதிய மினி எஸ்யூவியை களமிறக்க மஹிந்திரா திட்டம்

வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம், எஸ்யூவி தயாரிப்பில் முத்திரை பதித்து வருகிறது.
ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி-500 மூலம் தனது எஸ்யூவி வடிவமைப்பு பராக்கிரமத்தை நிருபித்த அந்த நிறுவனம் அடுத்ததாக புத்தம் புது மினி எஸ்யூவியை வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்யூவி தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்ற தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் தற்போது மஹிந்திரா கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது.
இந்த நிலையில், சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஞ்சினியர்கள் உதவியுடன் புதிய மினி எஸ்யூவியை வடிவமைக்கும் பணிகளை மஹிந்திரா தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த புதிய மினி எஸ்யூவி எஸ்-101 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த விலையில் களமிறக்குவதற்கு ஏதுவாக வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்குள் இந்த எஸ்யூவி இருக்கும்.
புதிய மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.4 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
மஹிந்திராவின் இந்த புதிய மினி எஸ்யூவி ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, இந்த புதிய மினி எஸ்யூவியை ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலையில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக மற்றொரு தகவல் கூறுகிறது.
இந்திய மார்க்கெட்டில் பிரிமியர் நிறுவனத்தின் ரியோ மட்டுமே மினி எஸ்யூவியாக உள்ளது. பிரிமியர் ரியோ ரூ.4.7 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை எஸ்யூவியும் கூட.
இந்த நிலையில், ரூ.4 லட்சத்தில் மினி எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகப்படுத்தினால், அதுவே இந்திய மார்க்கெட்டின் குறைந்த விலை எஸ்யூவியாக இருக்கும்.
தவிர, பிரிமியர் நிறுவனத்தைவிட மஹிந்திரா நாடு முழுவதும் பரந்து விரிந்த டீலர் நெட்வொர்க்கை கொண்டுள்ளதால் நிச்சயம் புதிய மினி எஸ்யூவி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.
முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் இந்த எஸ்யூவி, பின்னர் தென்கொரியாவில் சாங்யாங் மோட்டார்ஸ் ஆலையிலும் உற்பத்தி செய்து அங்கும் விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








