மஹிந்திரா புதிய எஸ்யூவி- சிறப்பு பார்வை

குளோபல் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் எஸ்யூவி இதுதான் என்று மஹிந்திரா கூறுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆம், சர்வதேச சந்தைக்கு செல்ல அனைத்து தகுதிகளையும் புதிய எக்ஸ்யூவி 5 ஓஓ பெற்றுள்ளது.
மேலும், மோனோக்யூ சேஸிஸில் வடிவமைக்கப்பட்ட முதல் எஸ்யூவி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இலகு எடை, அதிக உறுதி கொண்ட நவநாகரீக வடிவமைப்பை கொடுக்கக்கூடிய சேஸிஸ் என்பதுதான் மோனோக்யூ சேஸிஸ் வார்த்தையில் ஒளிந்துகொண்டிருக்கும் அர்த்தங்கள்.
பல்வேறு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 5 ஓஓவில் அப்படி என்னதான் சிறப்புகள் இருக்கின்றன. பார்க்கலாம் வாங்க.
எஞ்சின்:
ஸ்கார்ப்பியோவில் பொருத்தப்பட்டிருக்கும் 2179சிசி திறன் கொண்ட 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின்தான் புதிய எக்ஸ்யூவி 5ஓஓவிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ட்யூனிங்கில் புதிய எக்ஸ்யூவி 5ஓஓ எஞ்சின் வேறுபடுகிறது. இந்த எஞ்சின் 3750 ஆர்பிஎம் வேகத்தில் அதிகபட்சம் 140 பிஎச்பி ஆற்றலையும், 1600 ஆர்பிஎம் வேகத்தில் அதிகபட்சம் 330 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.
வெளிப்புற வடிவமைப்பு:
சீறும் சிறுத்தையை மனதில் கொண்டு இந்த புதிய எஸ்யூவியை வடிவமைத்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. ஸ்கார்ப்பியோ, ஸைலோவைவிட எடுப்பாக தெரியும் வகையில் மஹிந்திரா வாரிசுகளுக்குரிய வடிவமைப்புடன் கூடிய முன்பக்க கிரில், பக்கவாட்டில் பெல்ட்லைன் சற்று தடிமனாகவும், அதற்கு பொருத்தமாக பெரிய வீல் ஆர்ச் ஆகியவை புதிய எக்ஸ்யூவிக்கு படு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கிறது.
உள்பக்க வடிவமைப்பு:
உள்பக்கத்தில் பெரும்பாலான பகுதிகளை கறுப்பு மற்றும் பழுப்பு ஆக்கிரமித்துள்ளது. நீண்டு குறுகிய வடிவமைப்புடன் கூடிய சென்ட்ரல் கன்சோல் டெஷ்போர்டு உச்சியில் துவங்கி கியர் லிவர் இருக்கும் பகுதியில் முடிவடைகிறது. சென்ட்ரல் கன்சோல் உச்சியில் நேவிகேஷன வசதிகொண்ட டச் ஸ்கிரீனும், அதைத்தொடர்ந்து கன்ட்ரோல் பட்டன்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் அழகாகவும், கைக்கு லாவகமாக இருக்கும் ஸ்போக்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சொகுசு கையாளுமை:
புதிய எக்ஸ்யூ5 ஓஓவில் 7 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம். இரண்டாவது வரிசை மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளின் லெக் ரூம் அதிக இடத்தை கொண்டுள்ளதால் கால்களை நீட்டி மடக்கி உட்கார வசதியாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மிட்ரேஞ்சில் எக்ஸ்யூவி 5 ஓஓ எஞ்சின் தனது பராக்கிரமத்தை நமக்கு காட்டுகிறது.
மேலும், 140 கிமீ வேகத்தில் செல்லும்போதுகூட பாதுகாப்பான உணர்வை தருகிறது. ஏன் நகரங்களில் ஓட்டும்போதுகூட ஒரு பெரிய காரை ஓட்டுகிறோம் என்ற பதட்டப்பட வைக்காமல் ஓட்டுவதற்கு இலகுவாக இருக்கிறது. மூன்று வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனியான ஏசி வென்ட், புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன. இதன் டாப் வேரியண்ட்டான டபிள்யூ-8ல் வாய்ஸ் கன்ட்ரோல் ஆடியோ சிஸ்டம் இருக்கிறது.
பாதுகாப்பு:
இதன் டாப்வேரியண்ட்டில் காரை சறுக்காமல் தடுக்கும் இஎஸ்பி தொழில்நுட்பம், டயரில் காற்றின் அளவை காட்டும் கருவி, 6 ஏர்பேக்குகள், ரிமோட் லாக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.
மைலேஜ்:
புதிய எக்ஸ்யூவி 5ஓஓ நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜையும், நகர்ப்புறங்களில் லிட்டருக்கு 11 கிமீ மைலேஜையும் கொடுக்கிறது.
விலை:
புதிய எக்ஸ்யூவி 5 ஓஓ பேஸ் மாடல் டபிள்யூ-6 ரூ.10.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், 2 வீல் டிரைவ் டாப் வேரியண்ட்டான டபிள்யூ-8 மாடலின் ரூ.12.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், 4 வீல் டிரைவ் கொண்ட டபிள்யூ-8 டாப் வேரியண்ட் ரூ.13.78 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








