தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: மாருதி தலைவர்

ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி ஆலையை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான மோதல் முற்றி வருகிறது. நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே ஆலைக்குள் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று மாருதி கூறிவிட்டது.
ஆனால், அந்த பத்திரத்தில் கையெழுத்திட முடியாது என கூறி மானேசர் ஆலை தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
இந்த நிலையில், மாருதியின் 30வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா கூறியதாவது:
"தொழிலாளர்கள் எந்த உரிய காரணமும் இல்லாமல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் முழுக்க முழுக்க அரசியல் பிரச்னை.
எனவே, எங்களது நிறுவன கொள்கைகளை விட்டுக்கொடுத்து தொழிலாளர்களுடன் சமரசமாக செல்லும் பேச்சுக்கே இடமில்லை.
எங்கள் நிறுவனத்திற்கென்று வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீ்ர்வு காணமுடியும். இதை தொழிலாளர்களிடம் தெளிவாக கூறிவிட்டோம். எங்களது நிலையில் உறுதியாக இருக்கிறோம்.
இருப்பினும், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்," என்று கூறினார்.
தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் காரணமாக நேற்று வரை 8,550 கார்களின் உற்பத்தியில் இழப்பும், ரூ.425 கோடி வருவாய் இழப்பும் மாருதிக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








