புதிய ஸ்விப்ட் கார் புக்கிங் ஒரு லட்சத்தை தாண்டியது

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புத்தும் புது ஸ்விப்ட் இந்திய மார்க்கெட்டில் இதுவரை எந்த காருக்கும் இல்லாத அளவுக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிமுகம் செய்வதற்கு முன்பே 45,000 புக்கிங்குகளுடன் ஸ்விப்ட் மார்க்கெட்டில் களமிறங்கியது. இதைத்தொடர்ந்தும், ஸ்விப்ட் காருக்கான புக்கிங் எகிடுதகிடாக அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், ஸ்விப்ட் கார் உற்பத்தி செய்யப்படும் மானேசர் ஆலையில் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், ஸ்விப்ட் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஒருபுறம் ஸ்விப்ட் உற்பத்தி ஸ்தம்பித்திருந்த நிலையில், மறுபுறம் புக்கிங் தாறுமாறாக அதிகரித்து வந்தது. சரியான நேரத்தில் காரை டெலிவிரி கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட மாருதி ஸ்விப்ட் புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
இந்த நிலையில், தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் பழைய தொழிலாளர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்கள் நியமித்து ஸ்விப்ட் உற்பத்தியை துவங்கியது மாருதி. இதனால், ஸ்விப்ட் உற்பத்தி சீரடைய துவங்கியுள்ளது.
மானேசர் ஆலை மற்றும் குர்கான் ஆலையில் சேர்த்து நேற்றுமுன்தினம் மட்டும் 700 ஸ்விப்ட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக மாருதி தெரிவித்துள்ளது. ஸ்விப்ட் உற்பத்தி சீரடைந்து வருவதையடுத்து டீலர்களில் ஸ்விப்ட் புக்கிங் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
ஸ்விப்ட் கார் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆவலோடு புக்கிங் செய்து வருகின்றனர். இதுவரை 1.08 லட்சம் ஸ்விப்ட் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புக்கிங் கிடுகிடுவென உயர்ந்துவருவது போன்று, ஸ்விப்ட்டை டெலிவிரி பெறுவதற்கு 8 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.
பெட்ரோல் மாடலுக்கு 5 மாதங்களும், டீசல் மாடலுக்கு 6 மாதங்களும் டெலிவிரிக்காக காத்திருக்கவேண்டும் என்று மாருதி தெரிவித்துள்ளது. இருந்தாலும், டீசல் மாடலுக்கு குறைந்தது 8 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என மாருதி டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








