குஜராத்தில் கார் தொழிற்சாலை அமைக்க மாருதி திட்டம்?

கார் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் தனது உற்பத்தியை வெகுவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளில் விரிவுபடுத்தும் பணிகளையும், புதிய தொழிற்சாலைகள் அமைப்பதிலும் அந்த நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையி்ல், குஜராத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்த தகவலை அம்மாநில அரசு உயரதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில்,"குஜராத்தில் கார் தொழிற்சாலை அமைப்பதற்காக மாருதி நிறுவனம் அரசாங்கத்தை அணுகியது உண்மைதான். கார் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து தருமாறு அரசிடம் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது," என்றார்.
டாடா மோட்டார்சின் நானோ கார் உற்பத்தி செய்யப்படும் சனந்த் நகர் அல்லது ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைந்துள்ள ஹலோல் உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக தங்களது அதிகாரிகள் அங்கு அடிக்கடி சென்று வந்ததாக மாருதி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
புதிய தொழிற்சாலையை 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிட்டுள்ள மாருதி, அதில் தனது உதிரிபாகங்கள் தொழிற்சாலைகளையும் அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாருதி போன்றே ஃபோர்டு நிறுவனமும், குஜராத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








