தொழிலாளர் பிரச்னையால் மாருதி ஆலையில் 150 கார்கள் மட்டுமே உற்பத்தி

ஹரியானா மாநிலம், மானேசரிலுள்ள மாருதி ஆலையில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது.
தரக்கட்டுப்பாட்டு பிரச்னையை காரணம் காட்டி, 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மாருதி நிர்வாகம் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தது.
மேலும், தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்ப்பட்டு நடக்கும் வகையில், நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திட்டு தருமாறு மாருதி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நிபந்தனை விதித்ததோடு மட்டுமல்லாமல், கையெழுத்து போட்டவர்கள் மட்டும் ஆலைக்குள் பணி செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் கூறிவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால், அந்த ஆலையில் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரச்னையை சமாளிக்க தற்காலிக தொழிலாளர்களை மாருதி நியமித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 125 தற்காலிக தொழிலாளர்களை மாருதி நியமித்துள்ளது. இதனால், தற்போது ஆலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 800 ஆக இருக்கிறது.
இருப்பினும், முழு அளவில் உற்பத்தி செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. நாள் ஒன்றுக்கு 900 கார்களுக்கு மேல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மானேசர் ஆலையில், கடந்த வெள்ளிக்கிழமை 125 கார்களும், சனி்க்கிழமை 150 கார்களும் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.
இந்த நிலையில், மேலும் புதிதாக கணிசமான அளவில் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்க இருப்பதாக மாருதி நிர்வாகம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








