தொழிலாளர் பிரச்னையால் கார் விற்பனையில் பாதியை இழந்தது மாருதி

நாட்டின் கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி, மார்க்கெட்டில் பாதியளவுக்கு பங்களிப்பை அளித்து வரும் நிறுவனமாகவும் திகழ்கிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாருதியை தொழிலாளர் பிரச்னை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால், அந்த நிறுவனத்தின் விற்பனையிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
உற்பத்தி இழப்பு, இதன் எதிரொலியால் வருவாய் இழப்பு, நீண்ட காத்திருப்பு காலத்தால் கார்களின் புக்கிங்கை வாடிக்கையாளர்கள் ரத்து செய்வதால் வரும் இழப்பு என அந்த நிறுவனத்துக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் விற்பனையிலும் பாதியளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே விற்பனையில் கடும் சரிவை சந்தித்து வரும் மாருதிக்கு கடந்த மாதமும் சோகமான மாதமாகவே அமைந்தது. கடந்த மாதமும் அந்த நிறுவனத்தின் கார் விற்பனை பாதியளவுக்கு சரிந்தது.
மேலும், கடந்த மாதம் மட்டும் 40,000 கார் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபரில் 1,18,908 கார்களை விற்பனை செய்த அந்த நிறுவனம் கடந்த மாதம் வெறும் 55,595 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இதை ஒப்பிடுகையில், அந்த நிறுவனத்தின் விற்பனை 53.25 சதவீதம் சரிவு கண்டுள்ளது. மேலும், மாருதியின் அனைத்து மாடல் கார்களின் விற்பனையிலும் வீழ்ச்சி பிரதிபலித்தது.
இந்த நிலையில், தொழிலாளர் ஸ்ட்ரைக் பிரச்னையிலிருந்து விடுபட்டாலும், அடுத்த மாதம்தான் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்று மாருதி தெரிவித்துள்ளதால், அந்த நிறுவனத்தின் விற்பனை இயல்பு நிலைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று ஆட்டோத்துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








