ஒரு கோடி கார்கள்: மாருதியின் இமாலய சாதனை

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக திகழும் மாருதி சுஸுகி நிறுவனம், கடந்த 1983ம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய அரசும், ஜப்பானை சேர்ந்த சுஸுகி கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து மாருதி சுஸுகி கூட்டு குழுமத்தை உருவாக்கின.
குர்கானில் தொழிற்சாலை அமைத்து துவங்கப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனம் முதன்முதலாக மாருதி 800 காரை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, உற்பத்தியில் பல புதிய மைல் கற்களை கடக்க துவங்கிய மாருதி கடந்த 1994ம் ஆண்டு ஒரு மில்லியன் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு உற்பத்தி சிகரங்களை தொட்டு, இந்தியாவின் மாபெரும் கார் தயாரிப்பாளராக மாறிய மாருதி ஒரே ஆண்டில் மில்லியன் கார்களை உற்பத்தி செய்து கடந்த ஆண்டு சாதனை படைத்தது. சந்தையில் தற்போது 16 மாடல்களை கையில் வைத்துள்ள மாருதி இந்திய கார் சந்தை விற்பனையில் 45 சதவீத இடத்தை பெற்று அசைக்க முடியாத நிறுவனமாக திகழ்கிறது.
இந்நிலையில், உற்பத்தியில் மேலும் ஒரு இமாலய சாதனை படைத்துள்ளது மாருதி நிறுவனம். ஒரு கோடி கார்களை தயாரி்த்து இன்று தனது சாதனை மகுடத்தில் மேலும் வைரக்கல்லை பதித்துக்கொண்டுள்ளது மாருதி. குர்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள நீல நிறம் கொண்ட வேகன் ஆர் கார் மாருதியின் ஒரு கோடி காராக வெளிவந்துள்ளது.
இந்த இமாலய சாதனை குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷின்ஷோ நகனிஷி கூறியதாவது:
"வரலாற்று சிறப்புமிக்க சாதனை நிகழ்வை பதிவு செய்துள்ளோம். நிறுவனத்தை தோற்றுவித்த நிறுவனர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளோம். அவர்கள் அமைத்த சிறப்பான அடித்தளத்தால் இந்த சாதனைகளை எட்டமுடிந்தது.
தவிர, தொழிலாளர்களின் அயராத உழைப்பு, வர்த்தக பங்குதாரர்களின் ஒத்துழைப்பு ஆகியவை சாதனைகள் படைக்க காரணமாகியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுத்த பேராதரவு காரணமாக நாங்கள் இந்த உயரங்களை தொடுவது சாத்தியமாயிற்று," என்று கூறினார்.
மாருதி நிறுவனம் துவங்கப்பட்டு 27 ஆண்டுகளில் ஒரு கோடி கார்களை தயாரித்துள்ளது. ஆனால், அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் அடுத்த ஒரு கோடி கார்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாருதி கடந்த சில நாட்களுக்கு முன் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications