கார்களின் விலையை ரூ.9,000 வரை உயர்த்தியது மாருதி சுஸுகி

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம், உற்பத்தி செலவீனங்கள் உயர்வால், கடந்த ஜனவரி மாதத்தில் கார்களின் விலையை ரூ.8,000 வரை உயர்த்தியது. இது வாடிக்கையாளர் தலையில் கூடுதல் சுமையை ஏற்றியது.
இந்நிலையி்ல், இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு விலை உயர்வை அறிவித்துள்ளது மாருதி சுஸுகி. இது முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், உற்பத்தி செலவீனம் கடுமையாக உயர்ந்துள்ளதால், கார்களின் விலையை உயர்த்தவேண்டியதாயிற்று," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் மாருதி 800 கார்கள் முதல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிசாஷி வரை அனைத்து கார்களின் விலையும் 0.2 முதல் 2.4 சதவீதம் வரை விலை உயர்கிறது. இதனால், மாடலுக்கு தக்கவாறு அதிகபட்சம் ரூ.9,000 வரை மாருதி கார்களின் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு கடந்த 4ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ், டொயோட்டோவை தொடர்ந்து மாருதியும் கார்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








