தாய்லாந்து வெள்ளம்: புதிய பஜெரோ அறிமுகத்தை ஒத்திபோட்டது மிட்சுபிஷி

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கார்களை அசெம்பிளிங் செய்து விற்பனை செய்து வருகிறது.
சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் மிட்சுபிஷி கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இதற்கான, பெரும்பாலான உதிரிபாகங்கள் தாய்லாந்தில் உள்ள மிட்சுபிஷி ஆலையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், வரும் டெல்லி ஆட்டோ ஷோவில் புதிய பஜெரோ எஸ்யூவியை அறிமுகம் செய்ய மிட்சுபிஷி திட்டமிட்டிருந்தது. ஆனால், உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டுள்ளதால், புதிய பஜெரோ எஸ்யூவி அறிமுகத்தை சிறிது தள்ளிப்போட்டுள்ளது மிட்சுபிஷி-ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கூட்டணி.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மனோஜ் ஜா கூறியதாவது:
புதிய பஜெரோவை வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால், இயற்கை சீற்றங்களால் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்க்கொண்டு புதிய பஜெரோ அறிமுகத்தை ஒத்தி வைத்துள்ளோம். ஆனால், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் புதிய பஜெரோ அறிமுகம் செய்துவிடுவோம்," என்றார்.
இந்திய மார்க்கெட்டில் மிட்சுபிஷியின் விற்பனையில் பஜெரோ எஸ்யூவி முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்த மாதம் மிட்சுபிஷி விற்பனை செய்த 250 கார்களில் 99 பஜெரோ எஸ்யூவிக்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








