மாருதி கார் ஆலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டம்

கடந்த வாரம் தரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை காரணம் காட்டி 15 தொழிலாளர்களை மாருதி நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது. இதுதொடர்பாக, தொழிலாளர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்த நிலையில், நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு, தொழிலாளர்களை மாருதி நிர்வாகம் நேற்று வற்புறுத்தியுள்ளது. நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்து போட்டவர்கள் மட்டுமே ஆலைக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துவிட்டது. மேலும், நேற்று மானேசர் ஆலையின் அனைத்து வாசல்களையும் இழுத்து பூட்டிவிட்டது.
இதனால்,அங்கு பணிபுரியும் 1,200 தொழிலாளர்கள் ஆலை வளாகத்தை சுற்றி நின்று கொண்டிருந்தனர். மேலும், அனைத்து வாயில்களிலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால், மாருதி நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்னையால் மாருதியின் மானேசர் ஆலையில் நேற்று கார் உற்பத்தி நடைபெறாததால், 1,200 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டது.
இப்பிரச்னை குறித்து பெயர் கூற விரும்பாத மாருதி ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில்," ஆலையை சேர்ந்த சில தொழிலாளர்கள் வேலையை சரிவர செய்யாமல் 'ஒபி' அடிக்கின்றனர். கடந்த வாரம் தர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 437 கார்களில் 96 கார்கள் மட்டுமே தரச்சான்றிதழை பெற்றுள்ளன.
தொழிலாளர்களின் அலட்சிய போக்கு காரணமாக கார்களில் தரக்குறைபாடு ஏற்படுகிறது. தவிர, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கார்களின் உற்பத்தி இலக்கையும் எட்டுவதில்லை. இதற்காகவே, நிர்வாகம் நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்து வாஙகுகிறது. ஒழுங்காக வேலை பார்ப்பவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இருக்காது," என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தொழிலாளர் பிரதிநிதி ஒருவர்," விடுப்பு எடுக்கக்கூடாது, ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறையான விதிமுறைகளை தொழிலாளர்கள் மீது திணித்து, நன்னடத்தை பத்திரம் என்ற பெயரில் அவர்களது சுதந்திரத்தை பறிக்க பார்க்கிறது நிர்வாகம்," என்று குற்றம் சுமத்தினார்.
இந்த நிலையில், புக்கிங்கில் 85,000த்தை கடந்துள்ள புதிய ஸ்விப்ட் கார் மானேசர் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒருவேளை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அது ஸ்விப்ட் கார் உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
புதிய தொழிற்சங்கம் அமைக்க வேண்டி, கடந்த ஜூன் மாதம் இதே தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் நடத்திய 13 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாருதிக்கு ரூ.630 கோடி வருவாய் இழப்பும், 12,000க்கும் அதிகமான கார்களின் உற்பத்தியில் இழப்பும் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications








