மேலும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்தது: ஆமதாபாத்தில் அதிர்ச்சி சம்பவம்

உலகின் விலை குறைந்த கார் என்ற ஒரே பெருமையுடன் வந்த டாடா மோட்டார்சின் நானோ கார், கீழ்த்தட்டு மக்களின் கார் கனவை பூர்த்தி செய்யும் என்று எதிபார்க்க்ப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி வருகிறது.
இதுவரை 7 நானோ கார்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் நேற்று ஆமதாபாத்தில் மீண்டும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்தது. ஆமதாபாத்தை சேர்ந்த விபுல் ஜானி என்பவர் தனது நானோ காரில் நேற்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
சிவரஞ்சனிகிராஸ் ரோடு பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது, காரில் இருந்து புகை வர துவங்கியது. பதட்டமடைந்த அவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு அவசரமாக காரை விட்டு வெளியே வந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆசை ஆசையாய் வாங்கிய அவரது நானோ முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தததால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அந்த காரில் கூடுதலாக செய்யப்பட்ட தவறான ஒயரிங் காரணமாக தீப்பிடித்திருக்காலம் என கருதுவதாக டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவலை உரிமையாளரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நானோ கார்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








