பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து நஷ்டஈடு விரைவில் வழங்க புதிய திட்டம்

விபத்தில் சிக்கி மரணமடைவோர் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் விபத்து காப்பீட்டை பெறுவதற்கு மிகுந்த கால தாமதமாகிறது. மேலும், விபத்து காப்பீடு சம்பந்தமாக கோர்ட்டில் நடைபெறும் வழக்குகளில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதற்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் ஆகிறது.
இதனால், விபத்துக்களில் பாதிக்கப்படுவர்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இதை தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக விபத்து காப்பீட்டு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
இதற்காக, நாடு முழுவதும் செட்டில்மென்ட் கமிட்டிகளை அமைக்க யுனைடைட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ்,நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் மற்றும் நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் ஆகிய நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
புதிய திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் செட்டில்மென்ட் கமிட்டிகளில், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக விண்ணப்பித்து நஷ்டஈட்டு தொகையை பெறமுடியும்.
இதுகுறித்து முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"கோர்ட்டுக்கு வெளியில் வைத்து செட்டில்மென்ட் கமிட்டிகள் மூலம் உடனடியாக நஷ்டஈடு வழங்க வகை செய்யும் இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
அதிக தொகை கிடைக்கும் என பாதிக்கப்பட்டவர்களை சிலர் மூளைச் சலவை செய்துவிடுவதுதான் விபத்து காப்பீட்டு வழக்குகளில், காலதாமதம் ஆவதற்கு முக்கிய காரணம். ஆனால், செட்டில்மென்ட் கமிட்டிகளில் நஷ்ட ஈட்டு தொகையில் சற்று குறைந்தாலும், சீக்கிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்துவிடும்.
இந்த கமிட்டி பரிச்சார்த்த அடிப்படையில் கட்டாக் நகரில் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இந்த செட்டில்மென்ட் கமிட்டிகள் அமைக்கப்படும். இந்த கமிட்டிகளில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அனுபவம் மிக்க டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் 9 லட்சம் விபத்து காப்பீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செட்டில்மென்ட் கமிட்டி அமைக்கப்பட்டவுடன் விபத்து காப்பீட்டு வழக்குகள் வெகுவாக குறையும் என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடி பயன்தரும் என நம்புகிறோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








