தமிழகத்தில் புதிய டீசல் எஞ்சின் ஆலை: நிசான் அறிவிப்பு

ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார்ஸ் கார் நிறுவனம் சென்னை அருகே ஒரகடத்தில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலை நிசான் மற்றும் ரினால்ட் நிறுவனத்தின் கூட்டணியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கு அதிக கிராக்கி இருப்பதால் புதிய டீசல் எஞ்சின் ஆலையை நிசான் திறக்கிறது.
தற்போது மைக்ரா காருக்கு வெளிநாட்டில் இருந்து டீசல் எஞ்சின்களை நிசான் இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சன்னி மற்றும் மைக்ரா கார்களுக்கான டீசல் எஞ்சின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் புதிய எஞ்சின் ஆலையை நிசான் திறக்கிறது.
ஒரகடத்தில் செயல்பட்டு வரும் நிசான் கார் ஆலைக்கு அடுத்ததாக இந்த புதிய எஞ்சின் ஆலை அமைகிறது. அடுத்த ஆண்டு இந்த ஆலையில் டீசல் எஞ்சின் உற்பத்தி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் முதலில் சன்னி கார்களுக்கான டீசல் எஞ்சின்கள் உற்பத்தி செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, டீசல் மாடல் சன்னி கார் வரும் ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்ய உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மைக்ரா கார்களுக்கான டீசல் எஞ்சின்கள் இந்த ஆலையிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து நிசான் தலைமை நிதி அதிகாரி சுனில் ரேகி கூறுகையில்," கார்களுக்கான பெரும்பான்மையான பாகங்களை உள்நாட்டிலேயே பெற்று வருகிறோம்.
இந்த நிலையில், இங்கேயே டீசல் எஞ்சின்களையும் உற்பத்தி செய்தால் முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்புகளை நிசான் வழங்கும்.
இதன்மூலம் தரமாகவும், அதேநேரத்தில் குறைந்த விலையிலும் தனது கார்களை நிசான் விற்பனை செய்ய முடியும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








