வேலைப்பளுவை குறைக்க ஹூண்டாய்க்கு தொழிலாளர்கள் எச்சரிக்கை

நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சென்னை அருகே தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், வேலைப்பளுவை நிர்வாகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஹூண்டாய் தொழிலாளர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாயீஸ் யூனியன் (எச்எம்ஐஇயூ) கோரிக்கையை ஹூண்டாய் நிர்வாகம் ஏற்க மறுத்து வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, இந்த தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், யுனைடெட் யூனியன் ஆப் ஹூண்டாய் எம்ப்ளாயீஸ் யூனியன் மட்டுமே அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வேலைப்பளுவை குறைக்கவும், எச்எம்ஐஇயூ தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கும் ஹூண்டாய் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
இல்லாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி ஆலையில் அவ்வப்போது நடந்து வந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் சமீபத்தில்தான் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.
வேலை நிறுத்தம் காரணமாக மாருதிக்கு பல்வேறு வகையிலும் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஹூண்டாய் ஆலை தொழிலாளர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எச்எம்ஐஇயூ தொழிற்சங்கத்தில் 75 சதவீதம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மேலும், இந்த தொழிற்சங்கம் சிஐடியூ சங்கத்துடன் இணைப்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








