மீண்டும் விலை உயர்வை எதிர்நோக்கியுள்ள ஆட்டோமொபைல் துறை

கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து,மத்திய அரசு பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்,கார் மற்றும் பைக் மீதான கலால் வரியில் 4 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து,ஆட்டோமொபைல் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட துவங்கியது. இந்நிலையில்,கடந்த ஆண்டு பொது பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு அளிக்கப்பட்டு வந்த 4சதவீத வரிச்சலுகை 2சதவீதமாக குறைக்கப்பட்டது.ஆனால்,வரிச்சலுகை குறைக்கப்பட்டபோதிலும் ஆட்டோமொபைல் துறையில் அது எந்த பாதிப்பையும் ஏற்படவில்லை.
இதைக்கருத்தில்கொண்டு,வரும் 28ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு அளிக்கப்பட்டு வரும் 2 சதவீத வரிச்சலுகையை முற்றிலுமாக திரும்ப பெற அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால்,கார் மற்றும் பைக் விலை மீண்டும் உயரும் என்று தெரிகிறது.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் கூறுகையில், "பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டால்,அதை வாகன உற்பத்தியாளர்கள் எந்த வகையிலும், ஏற்கும் சூழல் இல்லை.எனவே,வாகனங்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும். வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டால்,சிறிய ரக கார்களின் விலை ரூ.6,000 வரை உயரலாம்"என்று கூறினார்.
உற்பத்தி செலவீனங்கள் பன்மடங்கு அதிகரித்ததையடுத்து,கார் மற்றும் பைக்குகளின் விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது.பல முன்னணி நிறுவனங்கள் கார்களின் விலையை ஒரு சதவீதம் முதல் 2சதவீதம் வரை உயர்த்தின.
கார் மற்றும் பைக்குகளின் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளதால்,கார் வாங்கும் கனவுகளுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர் மத்தியில்,அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








