டீலர் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் ரினால்ட்

மஹிந்திராவுடனான உறவு கசந்து முறிந்ததால் இந்திய சந்தையில் தனது பலத்தை பறைசாற்றுவதற்கு படுவேகமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ரினால்ட். சமீபத்தில் தனது புளூயன்ஸ் காம்பெக்ட் செடான் காருடன் இந்திய சந்தையில் இரண்டாவது அத்தியாத்தை துவங்கியது ரினால்ட்.
புளூயன்ஸ் கார் விற்பனையில் கவனம் செலுத்துவது ஒருபுறம் இருந்தாலும், மார்க்கெட்டில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது ரினால்ட். இன்னும் ஓர் ஆண்டுக்குள் மேலும் 5 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் விரிவாக்கப்பணிகளிலும் ஈடுபட இருக்கிறது.
ரினால்ட் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் லென் குர்ரன் கூறியதாவது:
"இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க டீலர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும். நாடு முழுவதும் எங்களுக்கு தற்போது 14 டீலர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இதை 100 ஆக உயர்த்த தி்ட்டமிட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள 75 நகரங்களில் எங்களது சேவை கிடைக்கும் வகையில் இந்த விரிவாக்கம் இருக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 40 டீலர்களை பெற்றுவிடுவோம். மேலும், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோலியோஸ் காம்பெக்ட் எஸ்.யூ.வீ. கார் வரும் அக்டோபரில் அறிமுகம் செய்ய உள்ளோம். இதையும் சேர்த்து இன்னும் ஓர் ஆண்டுக்குள் 5 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications








