புதிய மோடஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ரினால்ட்
அடுத்த ஆண்டு ரினால்ட் அறிமுகப்படுத்தப்பட இருக்கம் சிறிய கார் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய சந்தையில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட தனது மோடஸ் ஹேட்ச்பேக் காரை ரினால்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பது உறுதியாகியுள்ளது.
பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் மஹிந்திரா கூட்டணியை முறித்துக்கொண்டு கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தனித்து கார்களை விற்பனை செய்து வருகிறது. புளூயன்ஸ் பிரிமியம் செடான் கார், கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவி ஆகியவற்றை இந்தியாவில் களமிறக்கியுள்ளது ரினால்ட்.
இதைத்தொடர்ந்து, வரும் ஜனவரி மாதத்தில் புதிய சிறிய காரை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய சந்தையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற தனது மோடஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் ரினால்ட் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது.
சென்னையை அடுத்து ஓரகடத்தில் உள்ள ரினால்ட்-நிசான் தொழிற்சாலையின் சுற்று வட்டார பகுதிகளில் மோடஸ் காரின் சோதனை ஓட்டங்கள் தற்போது நடத்தப்பட்டு வருவதால் மோடஸின் வருகை உறுதியாகியுள்ளது.
வரும் 28ந் தேதி முதல் 30ந் தேதி வரை டெல்லி அருகே நொய்டாவில் நடைபெறும் இந்தியாவின் முதல் பார்முலா 1 கார் பந்தயத்தின்போது மோடஸ் காரை அறிமுகம் செய்ய ரினால்ட் திட்டமிட்டுள்ளது. மேலும், வரும் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவிலும் மோடஸ் காரை ரினால்ட் காட்சிக்கு வைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடஸ் மற்றும் கிராண்டு மோடஸ் என்ற இரண்டு மாடல்களில் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மோடஸைவிட, கிராண்டு மோடஸ் அளவில் சற்று பெரியது.
இந்த நிலையில், சாதாரண ரக மோடஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ரினால்ட் திட்டமிட்டுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியா வரும் முதல் 5 ஸ்டார் ரேட்டிங் கார் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








