புதிய ஹேட்ச்பேக் காரை காட்சிக்கு கொண்டு வந்தது ரினால்ட்

மஹிந்திரா கூட்டணியிலிருந்து பிரிந்த பிறகு புளூயன்ஸ் பிரிமியம் செடான் மற்றும் கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தனது பிராண்டுக்கு பிரிமியம் அந்தஸ்து பெயரை உருவாக்க ரினால்ட் முயன்று வருகிறது.
இந்த நிலையில், பார்முலா-1 போட்டியின்போது புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த இருப்பதாக ரினால்ட் தெரிவித்தது.இதனால், ஆட்டோ நிபுணர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதுவும் பிரிமியம் ஹேட்ச்பேக் காராகத்தான் இருக்கும் என்று ஆட்டோத்துறையினர் ஆருடம் கூறி வந்தனர்.
மேலும், மோடஸ் அல்லது கிலியோ ஹேட்ச்பேக் காரைத்தான் இந்தியாவில் ரினால்ட் அறிமுகப்படுத்த இருப்பதாக யூகத்தகவல்கள் வந்தன. ஆனால், இவை அனைத்தும் தவறானவை என்பதை நிருபிக்கும் வகையில், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட புதிய பல்ஸ் காரை கடந்த சனிக்கிழமை அறிமுகப்படுத்தியது ரினால்ட்.
நொய்டாவில் நடந்த பல்ஸ் அறிமுக விழாவில் பார்முலா-1 கார் டிரைவர்கள் மார்க் வெப்பர் மற்றும் கருண் சண்டோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்ஸ் காரை பார்த்தவுடன் நிசான் மைக்ராவை கண் முன் நிறுத்தியது. நிசான் மைக்ரா மற்றும் ரினால்ட் பல்ஸ் ஆகிய இரண்டும் ஒரே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டதுதான் இதற்கு காரணம். வெளிப்புற வடிவமைப்பு மட்டுமில்லாமல் உள்பக்கமும், ரினால்ட் லோகோவை தவிர வேறு புதிய அம்சங்கள் எதையும் பல்சில் காணமுடியவில்லை.
இந்த நிலையில், இந்த புதிய பல்ஸ் காரை வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள 2012ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் முறைப்படி அறிமுகப்படுத்த ரினால்ட் திட்டமிட்டுள்ளது.
மைக்ராவில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினுடன் இந்த கார் வரும் என்று தெரிகிறது. மேலும், ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரினால்ட் புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை களமிறக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கும், ஆட்டோத்துறையினருக்கும் பல்ஸ் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








