சாலை பாதுகாப்பு குறித்த தேசிய மாநாடு: அகமதாபாத்தில் நடக்கிறது

சாலை விதிகளை மீறுவதாலும், சாலைகளில் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் நடக்கும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை தவிர்க்கும் வகையில், முறையான சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதற்காக, ஆட்டோமோட்டிவ் பிட்னஸ் மற்றும் என்விரான்மென்ட் (ஃசேப்) என்ற அமைப்பு வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதுகுறித்து விவாதிப்பதற்காக ஆண்டுதோறும் தேசிய அளவில் மாநாட்டையும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுகக்கான சாலை பாதுகாப்பு தேசிய மாநாடு ஆமதாபாத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டை குஜராத் போக்குவரத்து துறையும், ஆமதாபாத் போக்குவரத்து போலீசாரும் இணைந்து நடத்துகின்றன.
வரும் 29 மற்றும் 30ந் தேதி நடைபெற உள்ள இந்த இரண்டு மாநாட்டில், சாலை பாதுகாப்பு, விதிமுறை குறித்த விழிப்புணர்வு, சாலை விதிகளை செயல்படுத்துவது மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ்,ஹோண்டா கார்ஸ், ஹீரோ ஹோண்டா மற்றும் போஸ்ச் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும், போக்குவரத்து துறையை சேர்ந்த நிபுணர்களும் பங்கேற்க இருப்பதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications








