ரூ.3 கோடியில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார் இந்தியாவில் அறிமுகம்

பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் ஆடம்பர கார் உலக அளவில் பிரசித்தி பெற்ற கார் மாடலாக திகழ்கிறது. உலகம் முழுவதும் உள்ள அரச குடும்பத்தினர் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத பாசப்பிணைப்பை இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் கொண்டுள்ளது.
இந்த நிலையில், புதிய பொலிவு மற்றும் கூடுதல் சொகுசு வசதிகளுடன் கூடிய புதிய கோஸ்ட் காரை ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கோஸ்ட் காரில் 6.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், உள்பக்கம் தாராள இடவசதிக்காக கூடுதல் வீல் பேஸ் கொண்டதாக இந்த கார் வந்துள்ளது.
இதுகுறித்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனைப் பிரிவு தலைவர் ஹெர்ப்ரைடு ஹசினோர்ல் கூறுகையில்," இந்தியாவில் ஆடம்பர கார்கள் விற்பனை நன்கு வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கோஸ்ட் காரை அறிமுகம் செய்துள்ளோம்.
கடந்த ஆண்டு 80 கார்களை இந்தியாவில் விற்பனை செய்தோம். நடப்பு ஆண்டில் மொத்தம் 100 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது," என்று கூறினார்.
டெல்லியில் புதிய கோஸ்ட் கார் ரூ.3.05 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் விரைவில் ஷோரூம்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








