இந்தியாவில் மூன்றாவது ஷோரூமை திறக்க ரோல்ஸ் ராய்ஸ் திட்டம்

பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர கார்கள், அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ரூ.2.5 கோடி முதல் ரூ.8 கோடி வரை விலை கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கு இந்தியாவில் மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 70 ஆடம்பர கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அங்கு புதிய ஷோரூமை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரோல்ஸ் ராய்ஸ் பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:
"கடந்த ஆண்டு உலக அளவில் மொத்தம் 1,100 கார்களை ரோல்ஸ் ராய்ஸ் விற்பனை செய்தது. அதில், 70 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனை கொடுத்த உற்சாகத்தால், இந்திய சந்தை மீது ரோல்ஸ் ராய்ஸ் அதிக அக்கறை காட்டி வருகிறது.
மேலும், சண்டிகர், லூதியானா மற்றும் ஜலந்தர் ஆகிய நகரங்களிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வாங்குவதற்கு அதிக விசாரணைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து வருகின்றன. எனவே, லூதியானா அல்லது சண்டிகரில் புதிய ஷோரூமை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஷோரூம் இந்த ஆண்டு கடைசியில் திறக்கப்படும். மேலும், புதிய ஷோரூம் மூலம் ஆண்டு முடிவுக்குள் 25 கார்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த ஆண்டில் 100 கார்களுக்கு மேல் இந்தியாவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








