புதிய என்ட்ரி லெவல் செடான் கார்: ஸ்கோடா ஆயத்தம்

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க ஸ்கோடா ஆட்டோ தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் புதிய லாராவை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் விரைவில் குறைந்த விலை செடான் காரை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது. பிராங்பர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மிஷன்எல் என்ற அந்த செடான் காரை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.
என்ட்ரி லெவல் எனப்படும் ஆரம்ப ரக செடான் காராக வரும் இந்த புதிய கார் வோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.
வென்ட்டோ தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தனது புதிய செடான் காரை வென்ட்டோவைவிட குறைவான விலையில் ஸ்கோடா ஆட்டோ களமிறக்குகிறது.
இந்த கார் மூலம் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுவோம் என்று ஸ்கோடா ஆட்டோ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா தவிர, ஐரோப்பா மற்றும் சீனாவிலும் இந்த புதிய செடான் காரை ஸ்கோடா அறிமுகப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








