மாசுக் கட்டுப்பாட்டு விதிகளால் ஸ்கோடா ஆக்டாவியா உற்பத்தி நிறுத்தம்?

பிரிமியம் ரகத்தை சேர்ந்த ஆக்டாவியா செடான் கார், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நகரங்களில் ஆக்டாவியா காரை விற்பனை செய்யமுடியாத நிலையில் ஸ்கோடா உள்ளது.
இதையடுத்து, ஆக்டாவியா உற்பத்தியை ஸ்கோடா ஆட்டோ நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்டாவியாவின் இடத்தை நிரப்புவதற்கு ஃபெபியா ஹேட்ச்பேக் காரின் பேஸ் மாடலை அடிப்படையாக கொண்ட செடான் காரை களமிறக்க ஸ்கோடா முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், ராபிட் செடான் காரையும் விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளையும் ஸ்கோடா முடுக்கிவிட்டுள்ளது. இந்த கார் வோக்ஸ்வேகனின் வென்ட்டோ காரின் சந்தையை பகிரந்துகொள்ளும் வகையில் இருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு மாடல்களில் வரவுள்ள ராபிட், வோக்ஸ்வேகனின் வென்ட்டோ காரின் விலையைவிட ரூ.50,000 குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்திகளை உறுதிபடுத்துவது போன்று, அவுரங்காபாத்தில் ஃபேபியா செடான் மாடல் மற்றும் ராபிட் கார்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஸ்கோடா ஆட்டோ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








