இந்தியாவில் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டம்

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தன் பிராண்டுக்கு தனி மதிப்பையும், வாடிக்கையாளர்களையும் பெற்றிருக்கிறது.
ஃபேபியா, லாரா, சூப்பர்ப் ஆகிய கார் மாடல்கள் மூலம் பிரபலமடைந்து, நகர்ப்புற சந்தையில் நல்ல வளர்ச்சி கண்டு வரும் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வேகன் அப் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள சிட்டிகோ என்று பெயரிடப்பட்ட புதிய ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் வரும் ஆண்டு அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஸ்கோடா ஃபேபியா கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் எஞ்சினுடன் சிட்டிகோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், அந்த எஞ்சின் இரண்டு ட்யூனிங் ரகங்களில் விற்பனை செய்யப்பட் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், 59 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் லிட்டருக்கு 23.82 கிமீ மைலேஜையும், மற்றொன்று 74 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினாகவும் வருகிறது. இந்த எஞ்சின் லிட்டருக்கு 23.25 கிமீ மைலேஜை தருவதோடு அதிகபட்சம் மணிக்கு 165கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றலையும் வழங்கும்.
சிட்டிகோ கார் 3.56 மீ்ட்டர் நீளமும், 1.65 மீட்டர் அகலமும், 1.48 மீட்டர் உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 251 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் பூட் ரூமை(டிக்கி) 951 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த சிட்டிகோவை முதலில் தனது தாயகமான செக் குடியரசு நாட்டிலும், அடுத்து இங்கிலாந்திலும் அதைத்தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சிட்டிகோ அறிமுகம் செய்யப்பட்டால் அது ஃபேபியாவைவிட விலை குறைந்த ஸ்கோடா காராக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








