இந்தியாவில் ப்ரீலேண்டர் கார் உற்பத்தி:தொழிற்சாலை திறந்தது டாடா

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பிரிட்டனின் புகழ்பெற்ற கார் நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு கையகப்படுத்தியது.
டாடாவின் சீர்திருத்தத்திற்கு பின் இரண்டு நிறுவனங்களின் கார் விற்பனையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, குறுகிய காலத்தில் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளன. இதனால், டாடா உற்சாகமடைந்துள்ளது.
ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனங்களின் சந்தையை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை டாடா மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, வேகமாக வளர்ந்து வரும் தெற்காசிய சந்தையில் ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களின் கார் விற்பனையை உயர்த்த டாடா தீவிரம் காட்டுகிறது.
ஜாகுவார், லேண்ட் ரோவர் நிறுவனங்களின் கார்கள் பிரிட்டனிலிருந்து ஆசிய நாடுகளுக்கு இறக்குமதி செய்து விற்கப்படுகின்றன. இறக்குமதிக்கு அதிக வரி செலுத்துவதால் கார்களின் விலையும் சற்று கூடுதலாக உள்ளது.
எனவே, ஆசிய நாடுகளில் குறைந்த விலையில் ஜாகுவார், லேண்ட் கார்கள் கிடைக்கும் விதமாக இந்தியாவில் அந்த நிறுவனங்களுக்கு தொழிற்சாலை திறக்க டாடா முடிவு செய்தது. இதற்காக, மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் லேண்ட் ரோவருக்கு தொழிற்சாலை திறந்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
இந்த தொழிற்சாலையில் முதலாவதாக லேண்ட் ரோவரின் பிரபல மாடலான ப்ரீலேண்டர்-2 எஸ்.யூ.வீ. கார் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உள்நாட்டு சந்தையிலும், பிற ஆசிய நாடுகளிலும் சவாலான விலையில் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை விற்பனை செய்ய வழிபிறந்துள்ளது
தவிர, ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து உதிரிபாகங்களை சப்ளை செய்ய இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் அதிகாரி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








