கிராமங்களை நோக்கி படையெடுக்கும் கார் நிறுவனங்கள்

மாநகரங்கள் மற்றும் நகரங்களில் கார்களின் விற்பனை அதீத வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய நிறுவனங்கள் வருகையால் போட்டியும் அதிமாகிவிட்டது. இதனால், பல கார் தயாரிப்பு நிறுவனங்களின் பார்வை ஊரகப்பகுதிகளின் மீது திரும்பியுள்ளது.
மேலும்,உற்பத்தி திறனையும் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதற்கு தகுந்தாற்போல், சந்தையில் நிலைத்து நிற்பதற்கு விற்பனை எல்லையையும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரிவுபடுத்தி வருகின்றன.
எதிர்காலத்தில் ஊரகப்பகுதிகளில் கார் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து,கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் விற்பனையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன.
மாருதி,ஹூண்டாய் நிறுவனங்கள் இந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையை கொண்டுள்ளன. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளின் கார் விற்பனையில் 20சதவீத இடத்தை பிடித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்,கார் விற்பனைக்கு ஏற்ற வகையில்,விற்பனை மையங்கள்,சர்வீஸ் சென்டர்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளையும் மாருதி அதிகரித்து வருகிறது. தவிர, கார் விற்பனையை பெருக்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த 5,000 விற்பனை பிரதிநிதிகளை நியமித்துள்ளது மாருதி.
இதேபோன்று ஹூண்டாய் நிறுவனமும் சிறு நகரங்களில் புதிய டீலர்களை நியமித்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 30சதவீதம் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தொடர்ந்து, சந்தையில் தக்க வைத்துக்கொள்ள மஹிந்தரா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் விற்பனையை பெருக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
கிராமப்புறங்களை குறிவைத்து டீலர்களை அதிகரித்து வருகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கு ஏற்ப,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஜெனரல் மோட்டார்ஸ் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. ஊரகப்பகுதிகளி்ல் கார் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மஹிந்தரா நிறுவனமும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








