இந்தியாவிலிருந்து எட்டியோஸ், லிவா கார்களை ஏற்றுமதி செய்யும் டொயோட்டோ

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், சர்வதேச அளவிலஇந்திய சந்தைக்கு டொயட்டோ முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இந்திய சந்தையின் தேவையை கருதி எட்டியோஸ் செடான் கார் மற்றும் லிவா ஹேட்ச்பேக் கார்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.
இதனால், அந்த நிறுவனத்தின் விற்பனை நன்கு வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை டொயோட்டோ முடுக்கி விட்டுள்ளது.
தவிர, அடுத்த ஆண்டு மார்ச் முதல் தென் ஆப்ரிக்காவுக்கு எட்டியோஸ், லிவா கார்களின் பெட்ரோல் மாடல்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் அந்தந்த மார்க்கெட் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப அளவிலும், வடிவமைப்பு அளவிலும் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.
உள்நாடு மற்றும் ஏற்றுமதி தேவையை சமாளிக்கும் விதமாக, பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தனது தொழிற்சாலையின் உற்பத்தி திறனை கணிசமாக உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனத்தின் கூடுதல் நிர்வாக இயக்குனர் ஷேகர் விஸ்வநாதன் கூறுகையில்," ஏற்றுமதி மூலம் டொயட்டோ கிர்லோஸ்கர் கார் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
உள்நாடு மற்றும் ஏற்றுமதி தேவையை சமாளிக்கும் விதமாக பெங்களூர் ஆலையின் உற்பத்தி திறனை இரு மடங்கு உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








