கார் விலையை 3 சதவீதம் வரை உயர்த்துகிறது டொயோட்டோ

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் முக்கிய சக்தியாக விளங்குகிறது. இந்த நிலையில், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் பாகங்களை இறக்குமதி செய்து கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு கார் நிறுவனங்களின் உற்பத்தி செலவீனம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் கார் விலையை விரைவில் உயர்த்தப்போவதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் தனது கார்களின் விலையை 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து டொயோட்டோ நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சந்தீப் சிங் கூறுகையில்," ஒரு பக்கம் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. மறுபக்கம் ஜப்பானிய யென் மதிப்பு கூடி வருகிறது.
இதனால், உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதை தவிர்க்கும் வகையில் கார் விலை உயர்த்துகிறோம். இந்த மாதத்தின் 3வது வாரத்தில் எந்தெந்த மாடல்களுக்கு விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








