ஆலை விரிவாக்கத்திற்கு ரூ.780 கோடி முதலீடு செய்யும் டொயோட்டோ

ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் டொயோட்டோ நிறுவனத்தின் 2 கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இதுவரை இந்த 2 ஆலைகளுக்காக மொத்தமாக ரூ.5,000 கோடியை டொயோட்டோ முதலீடு செய்துள்ளது. இந்த இரண்டு ஆலைகளிலும் 5,000 பேர் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், பிடதி ஆலையை விரிவாக்கம் செய்ய டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லிவா மற்றும் எட்டியோஸ் கார்களுக்கான எஞ்சின் மற்றும் உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே பெறும் விதமாக இந்த புதிய ஆலைகளை அமைக்க டொயோட்டோ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக அரசிடம் அந்த நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளதாக அம்மாநில தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"பிடதியிலுள்ள ஆலையை விரிவாக்கம் செய்யும் விதமாக புதிதாக ரூ.780 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் அரசிடம் தெரிவித்துள்ளது.
பழைய ஆலைகள் செயல்பட்டு வரும் இடத்திற்கு அருகிலேயே புதிதாக எஞ்சின் மற்றும் உதிரிபாக ஆலைகளை அமைப்பதற்காக கூடுதலாக 16 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இந்த ஆலை விரிவாக்கத்திற்கான அனுமதியை வழங்குமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது. இதுதொடர்பாக, அரசின் உயர்மட்ட கமிட்டி விரைவில் விவாதிக்க உள்ளது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








