22 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ அறிவிப்பு

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் கார்களை திரும்ப பெறும் அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு,தரை விரிப்பு(புளோர் மேட்) மற்றும் ஆக்சிலரேட்டர் பெடல் பிரச்சினை காரணமாக பல லட்சம் வாகனங்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ அறிவித்தது.
இதுமட்டுமின்றி, ஏற்கனவே பல முறை திரும்ப பெறும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்ததால், வாடிக்கையாளர் மத்தியில் டொயோட்டோவுக்கு இருந்த நன்மதிப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக, அமெரிக்க கார் சந்தையில் 17சதவீத இடத்தை பிடித்திருந்த டொயோட்டோவின் விற்பனை 15சதவீதமாக குறைந்தது.
டொயோட்டோ கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர் சந்தேகம் எழுப்பினர். மேலும், முழு அளவில் விசாரணை நடத்தவும் வலியுறுத்தினர். இதையடுத்து,கடந்த 10மாதங்களாக டொயோட்டோ கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (என்.எச்.டி.எஸ்.ஏ.) ஆய்வு செய்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன் டொயோட்டோ கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் எதுவும் இல்லை என என்.எச்.டி.எஸ்.ஏ.அறிவித்தது. இந்த நிலையில், ரீகால் அறிவிப்பை மீண்டும் வெளியிடுவது குறித்து தயங்கி வந்த டொயோட்டோ ஒரு வழியாக, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 22 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
ஆக்சிலேட்டர் பெடல் சரிவர இயங்காமல் பிரச்சினை ஏற்படுத்துவதாக தொடர்ந்து வந்த புகார்களையடுத்து டொயோட்டோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பிரச்சினைக்குரிய கார்களில் ஆக்சிலேட்டர் பெடல் சரிவர இயங்காதது மற்றும் தரை விரிப்புகள் ஆக்சிலேட்டர் பெடலில சிக்குவது உள்ளிட்ட பிரச்சினைகளை இலவசமாக சரிசெய்து தர டொயோட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பல்வேறு மாடல் கார்களும், திரும்ப பெறும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பு அமெரிக்க வாடிக்கையாளர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரை உலகம் முழுவதும் 1.9 கோடி கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








