மாருதி சூப்பர்வைசர்கள் மீது தொழிலாளர்கள் தாக்குதல்: 5 பேர் காயம்

டெல்லி அருகே மானேசரிலுள்ள மாருதி ஆலையை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.
ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பதில் புதிய தொழிலாளர்களை நியமிக்கும் பணியை மாருதி துவங்கியுள்ளது. இதற்கு, அந்த பகுதியில் அமைந்துள்ள பல்வேறு வாகன தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும், மாருதி ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக சுஸுகி பவர்ட்ரெயின், சுஸுகி காஸ்டிங்ஸ் மற்றும் சுஸுகி இருசக்கர வாகன ஆலையை சேர்ந்த 7,000 தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற ஸ்ட்ரைக்கை துவங்கியுள்ளனர். இதனால், அங்கு அமைந்துள்ள சுஸுகி தொழிற்சாலைகளில் கடும் உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாருதி ஆலையை சேர்ந்த 11 சூப்பர்வைசர்கள் இன்று காலை பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. இதில், மாருதி சூப்பர்வைசர்கள் 5 பேர் காயமடைந்தனர். மாருதி ஆலைக்கு அருகிலுள்ள ஹோண்டா இருசக்கர வாகன ஆலைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள மாருதி தொழிலாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, எப்ஐஆர் பதிவு செய்ய இருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, மானேசர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நேரமும் அங்கு வன்முறை ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








