டீலர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வால்வோ: சென்னையிலும் ஷோரூம் திறக்கிறது

சொகுசு பஸ் தயாரிப்பில் புகழ்பெற்ற வால்வோ நிறுவனத்தின் சொகுசு கார்கள் இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்தியாவின் சொகுசு கார் சந்தை கிடுகிடுவென வளர்ந்து வருவதை தொடர்ந்து, புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது வால்வோ. கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட S60 பிரிமியம் சொகுசு காரின் புக்கிங் 100 ஐ கடந்துள்ளது.
இதனால் உற்சாகமடைந்துள்ள வால்வோ, வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் நாட்டின் முக்கிய நகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வால்வோ இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியதாவது:
"கடந்த ஆண்டு இந்தியாவில் 13,000 சொகுசு கார்கள் விற்பனையாகி உள்ளது. இதில், வால்வோ 130 சொகுசு கார்களை விற்பனை செய்தது. அதேவேளை, இந்தியாவின் சொகுசு கார் விற்பனை சந்தை வரும் காலங்களில் கற்பனைக்கு எட்டமுடியாத வளர்ச்சியை பெறும்.
விற்பனை வளர்ச்சியை எட்டுவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்குவதற்காகவும் டீலர் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். டெல்லி, மும்பை, சண்டிகர், கோயம்புத்தூர், ஐதராபாத், கொச்சி மற்றும் புனே ஆகிய நகரங்களில் எங்களது டீலர்கள் உள்ளனர்.
இதுதவிர்த்து, சென்னை, பெங்களுர், கோல்கத்தா, ஆமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களில் புதிய டீலர்களை நியமிக்க உள்ளோம். இதன்மூலம், கார் விற்பனையை கணிசமாக உயர்த்த முடியும். மேலும், இன்னும் சில ஆண்டுகளில், இந்திய சொகுசு கார் சந்தையில் முக்கிய இடத்தை நிச்சயம் பெறுவோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








