இடநெருக்கடி: நொய்டாவுக்கு மாறும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ?

சர்வதேச அளவில் புகழ்பெற்ற டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில்தான் வழக்கமாக இந்த சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடநெருக்கடி மற்றும் கூட்ட நெருக்கடியால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. பத்திரிக்கையாளர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ ஏற்பாட்டாளர்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுதவிர, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அதிக கட்டணம் கொடுத்து ஸ்டால்களை அமைத்திருந்த கார் நிறுவனங்களும் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் புகார்களை அள்ளி வீசின. பார்வையாளர் கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் கூறின.
இந்த நிலையில், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை இரு இடங்களில் நடத்துவது குறித்து ஏற்பாட்டாளார்கள் பரிசீலித்து வருகின்றனர். ஆட்டோ உதிரிபாகங்களுக்கான கண்காட்சியை பிரகதி மைதானத்திலும், இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான கண்காட்சி அரங்கை நொய்டாவிலும் அமைப்பது குறித்து அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
ஆனால், இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இரு இடங்களில் கண்காட்சியை நடத்தும்போது பார்வையாளர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படும். தவிர, ஸ்டால்களை அமைப்பது முதல் வாகனங்களை கொண்டு செல்வது வரை அனைத்திலும் போக்குவரத்து இடையூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அடுத்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நொய்டாவிற்கு மாறுவது நிச்சயமான ஒன்று என்று ஆட்டோமொபைல் கண்காட்சியை ஏற்பாட்டு அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








