600 நிரந்தர தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க மாருதி முடிவு

கடந்த வாரம் மானேசரிலுள்ள மாருதி கார் ஆலையில் தொழிலாளர்கள் நிகழ்த்திய வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர் ஒருவர் பலியானார். 40 அதிகாரிகள் உட்பட 90 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் 100 தொழிலாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாருதி முடிவு செய்துள்ளது.
மேலும், மானேசர் ஆலையில் பணிபுரியும் மொத்தமுள்ள 1,500 நிர்ந்தர தொழிலாளர்களில் 600 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கும் மாருதி முடிவு செய்துள்ளது. இவர்கள்தான் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. மேலும், சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மாருதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாருதி மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் சித்திக் கூறுகையில்," வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்கும்போது ஒழுங்கீனம் உடையவர்கள் ஆலைக்குள் இருக்கக்கூடாது.
சக பணியாளர்களே அதிகாரிகள் மற்றும் சூப்பர்வைசர்களை தாக்கியுள்ளனர். மீண்டும் அந்த தொழிலாளர்களுடன் எவ்வாறு ஒன்றாக இணைந்து பணிபுரிய முடியும்," என்று கூறினார்.
மாருதி தலைவர் சின்ஷோ நகனிஷி கூறுகையில்," இந்த சம்பவத்தை பொறுத்தவரை சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த விதத்தில் வரும் சமாதான பார்முலாவையும் பரிசீலிக்க தயாரில்லை," என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
வன்முறையி்ல் ஈடுபட்டதாக கருதப்படும் 600 நிர்ந்தர தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை நியமிக்கவும் மாருதி முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








