ரத்தன் டாடாவின் பாராட்டுக்கு டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த டாடா மோட்டார்ஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்கள் முன்னிலையில் அந்த நிறுவன தலைவர் ரத்தன் டாடா உரையாற்றினார். விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் கலந்து கொள்ளும் கடைசி கூட்டம் என்பதால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
அப்போது அவர் டாடா மோட்டார்சின் நேரடி போட்டியாளரான மஹிந்திராவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியை வெகுவாக பாராட்டி பேசினார். இது அனைவரையும் வியக்க வைத்தது.
இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் குறித்து ரத்தன் டாடா கூறிய கருத்துக்களுக்கு மஹிந்திராவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் சமூக தளத்தில் தமது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,"மூத்த சகோதரர்(ரத்தன் டாடா) முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது போன்று உணர்கிறோம். உண்மையிலேயே அவர் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்.
ரத்தன் டாடாவின் பாராட்டு எங்களை இன்னும் கடுமையாக உழைப்பதற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், கார் மார்க்கெட்டில் டாடா மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி மஹிந்திரா 3ம் இடத்தை பிடித்தது. இதை மனதில் கொண்டே ரத்தன் டாடா கருத்து கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications








