ஆப்டேர் ஹைபிரிட் பஸ்களை அறிமுகப்படுத்த அசோக் லேலண்ட் திட்டம்
அதிக மைலேஜ் கொடுக்கும் இரட்டை எரிபொருளில் இயங்கும் ஆப்டேர் பஸ் மாடல்களை அறிமுகப்படுத்த அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது.
மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனமும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

தனது கீழ் செயல்பட்டு வரும் பிரிட்டனை சேர்ந்த பஸ் தயாரிப்பு நிறுவனமான ஆப்டேர் நிறுவனத்தின் ஹைபிரிட் பஸ்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது.
ஆப்டேர் வசம் தற்போது எலக்ட்ரிக் பஸ் மாடல்கள் இருக்கின்றன. ஆனால், அவை விலை அதிகம் கொண்டதாக இருக்கும் என்பதால் இந்திய மார்க்கெட்டுக்கு சரியாக இருக்காது என்று லேலண்ட் கருதுகிறது.
எனவே, ஆப்டேர் எலக்ட்ரிக் பஸ்களை இரட்டை எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் மாற்றும் பணிகளை அசோக் லேலண்ட் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், ஹைபிரிட் பஸ்களை தயாரிப்பதற்காக தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துக்கு கடந்த நிதியாண்டில் 349 கோடியை அசோக் லேலண்ட் ஒதுக்கியது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிர்வாக துணைத் தலைவர் சேஷாயி கூறுகையில்," மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் பஸ்களை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எங்களது ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மார்க்கெட்டுக்கு தக்கவாறு விலை மற்றும் அம்சங்களுடன் ஆப்டேர் ஹைபிரிட் பஸ் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறோம்," என்றார்.
பிரிட்டனை சேர்ந்த ஆப்டேர் பஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 75 பங்ககள் அசோக் லேலண்ட் வசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








