ஆட்டோரிக்ஷாக்களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் ஆட்டோரிக்ஷாக்களில் மீட்டருக்கு மேல் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக குற்றுச்சாட்டு தொடர்கதையாகியுள்ளது.
பெட்ரோல் விலை எகிறி வருவதால் ஆட்டோரிக்ஷா கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க வேண்டியிருப்பதாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர். மேலும், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இருதரப்பிலிருந்து வந்த புகார்கள் கோரிக்கைகளுக்கு முடிவு கட்டுவதற்கு தமிழக அரசு தீர்மானித்தது.
இதுகுறித்த உண்மை நிலையை அறிந்து கொண்டு புதிய கட்டணத்தை நிர்ணயிக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. மேலும், அண்டை மாநிலங்களி்ல் ஆட்டோரிக்ஷா கட்டணம் குறித்த தகவல்களை பெற தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் குழுவினர் தரும் அறிக்கை அடிப்படையில் விரைவில் புதிய ஆட்டோரிக்ஷா கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க உள்ளது. மேலும், புதிய ஆட்டோ கட்டணம் குறித்து பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய ஆட்டோ கட்டண அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வெளியிடுவார் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








