கார்களில் கருப்பு கண்ணாடிக்குத் தடை: பெங்களூரில் காலக் கெடு நீட்டிப்பு

கார்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கருப்பு கண்ணாடி பொருத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநகரங்களில் இந்த தடை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.
சென்னையில் கூட நேற்று முதல் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் பெங்களூரில் இந்த தடை அமலுக்கு வரும் என்று போலீசார் அறிவித்திருந்தனர். ஆனால், இந்த தடைக்கான காலக் கெடுவை பெங்களூர் போலீசார் தற்போது நீட்டித்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி கூறுகையில்," பொதுமக்களிடம் இருந்தும், பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் வந்த கோரிக்கையை ஏற்று கார்களில் கருப்பு கண்ணாடிக்கான தடையை அடுத்த மாதம் 5ந் தேதி வரை நீட்டித்துள்ளோம்," என்றார்.
இதனால், கார் உரிமையாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கார்களில் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த சன் கன்ட்ரோல் ஃபிலிம் எனப்படும் கருப்பு பேப்பரை நீக்குவதற்கு பெங்களூர் போலீசார் இலவச முகாம்களை கடந்த வார இறுதியில் நடத்தினர். ஆனால், கூட்டம் அதிகமானதால் பலபேர் கருப்பு பேப்பரை நீக்க முடியாது திரும்பினர்.
இந்த நிலையில், தற்போது காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கார் உரிமையாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். அடுத்த மாதம் 5ந் தேதிக்கு பிறகு கார்களில் கருப்பு கண்ணாடியுடன் வந்தால் முதல் முறை ரூ.300 அபராதமும், இரண்டாம் முறை ரூ.500 அபராதமும், மூன்றாம் முறையும் கருப்பு கண்ணாடியுடன் வந்தால் கார் பறிமுதல் செய்யப்படும் என்று பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதி மன்ற உத்தரவு என்பதால் தடைக்கான காலக் கெடுவை நீட்டிக்க இயலாது என சென்னை போலீசார் நேற்று தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது பெங்களூர் போலீசார் தடைக்கான காலக் கெடுவை நீட்டித்திருப்பதால், சென்னையிலும் தடைக்கான காலக் கெடுவை போலீசார் நீட்டிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








