லிட்டருக்கு 240 கிமீ மைலேஜ் செல்லும் கார்: பெங்களூர் மாணவர்கள் கண்டுபிடிப்பு

பெட்ரோல் விலை உயர்வால் அதிக மைலேஜ் கொடுக்கும் காரை சல்லடை போட்டு ஆராய்ந்து வாங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், மைலேஜ் கொடுக்கும் காருக்கு மார்க்கெட்டில் தனி இமேஜ் இருக்கிறது.
இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த 11 மாணவர்கள் சேர்ந்து புதிய கான்செப்ட் கார் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இலகு எடை கொண்ட அலுமினியம் மற்றும் பைபர் பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டருக்கு 240 கிமீ மைலேஜ் தருகிறதாம்.
பஜாஜ் எஞ்சினில் சில மாற்றங்கள் செய்து இந்த காரில் பொருத்தியுள்ளனர். ட்ரோனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காரை வடிவமைக்க 2.5 லட்ச ரூபாய் செலவானதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
ஒருவர் மட்டுமே பயணிக்கும் வசதி கொண்ட இந்த காரில் சஸ்பென்ஷன் போன்ற வசதிகள் இல்லை. இருப்பினும், மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும். ஸ்பான்சர் கிடைத்தால் இந்த காரை வர்த்தக ரீதியிலும் வெற்றிகரமாக தயாரிக்க முடியும் என்று காரை வடிவமைத்த மாணவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் 4ந்தேதி முதல் 7ந் தேதி வரை மலேசியாவில் நடைபெற இருக்கும் ஷெல் ஈக்கோ மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 150 அணிகள் தங்களது கான்செப்ட் கார்களுடன் பங்கேற்க உள்ளன.
இதுபோன்ற கண்டுபிடிப்புகளை வர்த்தக ரீதியில் வெற்றி பெற வைக்க கார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். எரிபொருள் தேவையை குறைக்க வழி பிறப்பதோடு, திறமை வாய்ந்த மாணவர்களை நேரடியாக தங்களுடன் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கார் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








