முல்சானே காரின் கன்வெர்ட்டிபிள் மாடலை தயாரிக்கும் பென்ட்லீ!

உலக அளவில் ஆடம்பர கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நிறுவனமான பென்ட்லீ, கடந்த 2009ம் ஆண்டு முல்சானே ஆடம்பர செடான் காரை அறிமுகம் செய்தது. தற்போது ஸ்டான்டர்டு மாடல் மட்டுமே கிடைக்கிறது.
இந்தநிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முல்சானே காரின் புதிய மாடலை பென்ட்லீ தயாரித்து வருகிறது. சாப்ட் டாப் எனப்படும் மடக்கி விரிக்கும் வசதி கொண்ட கூரையுடன் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய முல்சானே காரின் பக்கவாட்டு மற்றும் முன்புற வடிவமைப்பில் மாற்றம் இருக்காது.
ஆனால், பின்புற வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த புதிய முல்சானே கார் பென்ட்லீக்கு புதுத் தெம்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முல்சானே கார் உலக அளவில் அதிக சொகுசு வசதி கொண்ட கன்வெர்ட்டிபிள் காராக இருக்கும் என்று பென்ட்லீ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார் 4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும். புதிய முல்சானே கன்வெர்ட்டிபிள் மாடலில் வி8 எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பென்ட்லீயின் லிமோசின் ரக கார்களில் இந்த எஞ்சின்தான் பொருத்தப்பட்டு வருகிறது.
புதிய முல்சானே கன்வெர்ட்டிபிள் மாடல் பென்ட்லீயின் பிராண்டு மதிப்பை புதிய உச்சத்திற்கு அழைத்து செல்லும் என அந்த நிறுவனத்தின் தலைவர் வோல்ப்ஹேங் டர்பைமர் கூறினார்.


Click it and Unblock the Notifications








