26 ந்தேதி டிரக்குகளை அறிமுகப்படுத்துகிறது பாரத் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் தாய் நிறுவனமான டெய்ம்லர் சர்வதேச அளவில் டிரக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தநிலையில், உலக அளவில் டிரக் விற்பனையில் நன்கு வளர்ச்சி கண்டு வரும் இந்திய மார்க்கெட்டில் டெய்ம்லர் அடியெடுத்து வைக்கிறது. பாரத் பென்ஸ் என்ற பிரத்யேக பிராண்டில் டிரக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது.
மஹாராஷ்டிராவிலுள்ள ஆலையில் இருந்து பஸ்களை தயாரித்து வந்த டெய்ம்லர், தற்போது 'பாரத் பென்ஸ்' என்ற புதிய பிராண்டில் டிரக்குகளை தயாரிக்க உள்ளது. ரூ.4,500 கோடி முதலீட்டில் சென்னை அருகே கட்டப்பட்டிருக்கும் பாரத் பென்ஸ் டிரக் ஆலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். தற்போது 1,400 பணியாளர்களுடன் உற்பத்தியை துவங்க இருக்கும் ஆலையை, விற்பனையை பொருத்து விரிவாக்கம் செய்யவும் டெய்ம்லர் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் 26ந் தேதி புதிய டிரக் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது டெய்ம்லர். மேலும், அடுத்த ஓர் ஆண்டில் 18 புதிய உலகத் தரம் வாய்ந்த டிரக் மாடல்களை பாரத் பென்ஸ் பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக டெய்ம்லர் தெரிவித்துள்ளது. 7முதல் 16 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட இலகு ரக டிரக்குகள் மற்றும் 25 முதல் 49 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஆண்டுக்கு 36,000 டிரக்குகள் தயாரிக்கும் திறன் கொண்ட சென்னை ஆலையில் ஆண்டுக்கு 12,000 இலகு ரக டிரக்குகளும், 24,000 கனரக டிரக்குகளும் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட தனது டிரக்குகள் மூலம் இந்திய டிரைவர்களின் தலையெழுத்து மாறு்ம் என்று டெய்ம்லர் தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








