ஆகஸ்ட்டில் கார், பைக் விற்பனையில் பெரும் சரிவு

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆட்டோமொபைல் துறை பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் கார் விற்பனை பெரும் சரிவு கண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கார் மார்க்கெட்டில் பெரும் பங்களிப்பை கொடுத்து வரும் மாருதியின் விற்பனை 41 சதவீதம் சரிவு கண்டதுதான். கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் மொத்தமாக 1,18,142 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் குறைவாகும். கார் மார்க்கெட் விற்பனை வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இருசக்கர வாகன விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் அதுக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக இருசக்கர வாகன விற்பனை சரிவை சந்தித்துள்ளது. பருவமழை பொய்த்ததால் ஊரக மார்க்கெட்டில் இருசக்கர வாகன விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது. கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் 7,66,127 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில் இது 8.5 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனையும் 11.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சியாம் அமைப்பின் மூத்த இயக்குனர் சுகட்டோ சென் கூறுகையில்," வாகன விற்பனை குறைந்துள்ளது கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்த மாதமும் இதே நிலை நீடித்தால் எங்களது விற்பனை வளர்ச்சியின் இலக்கை திரும்பவும் குறைக்க வேண்டியிருக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications








