டீசல் கார்கள் மீது ரூ.80,000 கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டம்

பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால், டீசலுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருவதால் பெட்ரோல் விலையை ஒப்பிடும்போது டீசல் விலை குறைவாக இருக்கிறது.
இதனால், டீசல் கார்களை வாங்கும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், டீசல் நுகர்வு அதிரித்துள்ளதால், மத்திய அரசு வழங்கும் மானியத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில்க்கொண்டு டீசல் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால், விலைவாசியை கட்டுக்குள் வைப்பதற்காக டீசல் மானியத்தில் கைவைக்க மத்திய அரசு முன்வராமல் இருக்கிறது.
இதற்கு மாற்றாக டீசல் கார்களுக்கு கூடுதல் உற்பத்தி வரி விதிக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கொடுத்த யோசனையை மத்திய அரசிடம் பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, டீசல் கார்கள் மீது கூடுதல் உற்பத்தி வரியை விதிப்பது குறித்து மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. கடந்த பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால், மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. இந்த நிலையில், டீசல் நுகர்வை சமாளிக்கவும், மானியத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய சூழ்நிலை காரணமாகவும் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கையிலெடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
டீசல் கார் மீது ரூ.80,000 வரை கூடுதலாக உற்பத்தி வரி விதிப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். பெட்ரோல் விலையால் கணிசமாக உயர்ந்து விட்டதால் டீசல் கார்கள்தான் தற்போது ஒரே தீர்வாக இருக்கின்றன.
பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை அதிகம். இந்த நிலையில், டீசல் கார்கள் மீதான உற்பத்தி வரியை மேலும் அதிரித்தால் கார் மார்க்கெட்டில் அது மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும், மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும் புதிதாக டீசல் எஞ்சின் ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளன.
இதனால், பெரும் முதலீடும், வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அதேவேளை, மத்திய அரசு டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதித்தால் அது நிச்சயம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், டீசல் விலையையும் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








