வெறும் 40,000 ரூபாயில் வரும் மேட் இன் சைனா ஆட்டோ ரிக்ஷா

இந்தியாவில் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை சீன நிறுவனம் ஒன்று விற்பனைக்கு கொண்டு வருகிறது. முதலில் கேரளாவில் விற்பனைக்கு வரும் இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் ரூ.40,000 விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆட்டோ ரிக்ஷாக்கள் இன்றியமையாத போக்குவரத்து வாகனங்களாக திகழ்கின்றன. குறிப்பாக, நகர்ப்புற போக்குவரத்தில் ஆட்டோ ரிக்ஷாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் நாட்டில் தற்போது பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்களை சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஷாங்காய் நகரை சேர்ந்த ரொமேய் என்ற அந்த நிறுவனம் முதலாவதாக கேரளாவில் தனது எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதற்காக, சில ஆட்டோரிக்ஷாக்களை அங்கு சோதனை முறையில் இயக்கி வருகிறது. இது வெற்றிகரமாக அமைந்தால் அதிக அளவில் சீன ஆட்டோ ரிக்ஷாக்கள் கேரளாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரொமேய் நிறுவனத்திடம் 60 வாட்ஸ் முதல் 1,000 வாட்ஸ் திறன் கொண்ட மோட்டார்களுடன் ஆட்டோ ரிக்ஷா மாடல்கள் இருக்கின்றன. இதில், 200 வாட்ஸ் மோட்டார் கொண்ட மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறி்ப்பாக, கேரளாவின் சுற்றுலாத் தலங்களில் பயன்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை ரொமேய் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதில், வரவேற்க்கத்தக்க விஷயம் இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் பேட்டரியில் இயங்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.
மேலும், தற்போது பெட்ரோல் மற்றும் எல்பிஜியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள் ரூ.1.70 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், சீன ஆட்டோ ரிக்ஷா ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற மிகக்குறைந்த விலையில் விற்பனைக்கு வருவதால் அதிக வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
பொதுவாக, பெட்ரோல் மற்றும் எல்பிஜி வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் இருமடங்கு அதிக விலை கொண்டதாக இருக்கும். ஆனால், சீன நிறுவனம் இதற்கு நேர் மாறாக மிக மிக குறைந்த விலையில் தனது தயாரிப்பை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








