'சீப்' சீன டயர்களால் இந்திய ரப்பர் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்!

மொபைல்போன் மார்க்கெட்டில் சீனாவின் மலிவு விலை தயாரிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பாதிக்கு பாதி விலையில் சீன மொபைல்போன்கள் விற்கப்பட்டதால், முன்னணி மொபைல்போன் நிறுவனங்களின் விற்பனை பெரிதும் பாதித்தன.
இந்த நிலையில், தற்போது மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் சீன டயர்களால், இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் ரப்பர் நிறுவனங்களுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் சிறந்த ரப்பர் விவசாயிகளுக்கான பரிசளிக்கும் விழா நடந்தது. இதில், ரப்பர் போர்டு தலைவர் ஷீலா தாமஸ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
"மலிவு விலை பொருட்களை தயாரிப்பதில் சீனா முன்னிலை வகிக்கிறது. எவ்வாறு அவர்கள் மலிவான விலையில் பொருட்களை தயாரிக்கின்றனர் என்பது தெரியவில்லை. தற்போது அவர்கள் மலிவு விலை டயர்களையும் தயாரிக்கின்றனர்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை சீன டயர்களால் இந்திய ரப்பர் உற்பத்தியாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவற்றை விட இந்திய ரப்பர் மற்றும் டயர்கள் அதிக தரம் கொண்டதாக இருப்பதால் இந்த அச்சுறுத்தலை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
மலிவு விலையில் தரம் குறைந்த டயர்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








